பட மூலாதாரம், Getty Images
கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதம் ஆகியவற்றால் இளம் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை மிரட்டலாகத் தொடங்கியுள்ளது.
ஹெடிங்லியில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது.
ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழக்கவே, கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்ததே நடுவரிசை வீரர்கள் அழுத்தமின்றி பேட் செய்ய முடிந்தது.
தமிழக வீரர் சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்த நிலையில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
வலுவான தொடக்கம்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கவே, இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர்.
இங்கிலாந்து வீரர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணியின் பேட்டிங் அவர்களை திணறடிக்கும் வகையில் அமைந்திருந்தது. ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி அற்புதமாக இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ஆடியது.
குறிப்பாக ஜெய்ஸ்வால் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. நல்ல பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்து, ஆப் சைடிலேயே தனது பெரும்பகுதி ஷாட்களில் ரன்களைச் சேர்த்தார். ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கில் நிதானமும், பொறுமையும் நன்கு தெரிந்தது.
15 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. ராகுல் 42 ரன்கள் சேர்த்த நிலையில் கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
சுதர்சன் டக் அவுட்
ராகுல், ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து அறிமுக ஆட்டத்தில் களமிறங்கிய சாய் சுதர்சன், 4 பந்துகளில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார்.
சுதர்சன் களமிறங்கிய போது லெக் திசையில் ஸ்லிப் வைத்து ஸ்டோக்ஸ் பந்து வீசினார். லெக் சைடில் விலக்கி வீசப்பட்ட 2வது பந்தில் சுதர்சன் தட்டவே பந்து கால்காப்பில் பட்டு கேட்சானது, இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்யவே அவுட் வழங்கவில்லை.
இந்த சம்பவத்திலேயே சுதர்சன் தன்னை சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால், 4வது பந்தும் அதே போன்று ஸ்டோக்ஸ் வீச, தேவையற்ற ஷாட்டை சுதர்சன் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் செஷனில் இந்திய அணி 100 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
பட மூலாதாரம், Getty Images
கில், ஜெய்ஸ்வால் வலுவான கூட்டணி
3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கேப்டன் கில் ஜோடி சேர்ந்தனர். ஜெய்ஸ்வால் ஏற்கெனவே நன்கு செட்டில் ஆகி இருந்தார். ஜெய்ஸ்வால் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார், கில் 56 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் அரைசதத்தை வேகமாக எட்டினார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கார்க், வோக்ஸ், டங், ஸ்டோக்ஸ் ஆகியோர் மாறிமாறிப் பந்துவீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் கில், ஜெய்ஸ்வால் இருவரும் ரன் எடுக்கும் வேகத்தை குறைத்தார்களே தவிர தடுமாறவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்து சென்றது. ஜெய்ஸ்வால் 144 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கமாகும்.
ஜெய்ஸ்வால் தனது சதத்தில் பெரும்பாலான ரன்களை ஆப் சைடிலேயே அடித்திருந்தார். வழக்காக லெக்திசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய ஜெய்ஸ்வால் பந்துவீச்சுக்கு ஏற்ப பேட்டிங்கை மாற்றி தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
பிற்பகல் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து 2வது செஷனில் வலுவாக காலூன்றியிருந்தது.
தேநீர் இடைவேளைக்குப்பின் ஜெய்ஸ்வால் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. ஜெய்ஸ்வால் 101 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 129 ரன்கள் சேர்த்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ரிஷப் பந்த் அதிரடி தொடக்கம்
4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ரிஷப் பந்த், தான் சந்தித்த 2வது பந்திலேயே கவர் திசையில் பவுண்டரி அடித்தார்.
ரிஷப் பந்த், கில் இருவரும் 3வது செஷனில் ஆதிக்கம் செய்து ரன்களை வேகமாகச் சேர்த்தனர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு இருவருக்கும் பெரிதாக எந்த சிரமத்தையும் அளிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப்பின் இந்திய அணி 300 ரன்களை எட்டியது.
சுப்மன் கில் வேகமாக அரைசதம் அடித்திருந்த நிலையில் 140 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 90 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் முயற்சி எந்த பலனையும் அளிக்கவில்லை. ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்தாலும் அவ்வப்போது தனது பெரிய ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்தார்.
ரிஷப் பந்த் பொதுவாக கடினமான ஆடுகளங்களில் சிறப்பாக பேட் செய்து ரன்களைச் சேர்க்கக் கூடியவர். ஹெடிங்லி ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ரிஷப் பந்த் அதற்கு ஏற்றார்போல் தனது ஆட்டத்தை மாற்றி நிதானமாக பேட் செய்தார்.
2வது புதிய பந்து 80-வது ஓவரில்தான் எடுக்கப்பட்டது. புதிய பந்து எடுத்தபின் விக்கெட் வீழ்த்தலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், ஏற்கெனவே செட்டில் ஆன பேட்டர்கள் கில், ரிஷப் பந்த் இருவரும் பந்துகளை நன்கு எதிர்கொண்டு ஆடியதால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் பந்த் இருவரும் 138 ரன்கள் சேர்த்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்தில் இந்திய இளம் படை முதல் நாளே புதிய சாதனை
சீனியர் பேட்டர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் என்ன செய்யப் போகிறது, அதிலும் ஸ்விங்கிற்கும், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு சமாளித்து ஆடுவார்கள் என்ற கேள்விக்கும் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பதில் அளித்துவிட்டனர்.
ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2022-ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்ததுதான் இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணிகள் முதல் நாள் ஆட்டத்தில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
பட மூலாதாரம், Getty Images
89 ஆண்டுகளுக்குப்பின் ஜெய்ஸ்வால் புதிய சாதனை
ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்திருந்தார், இப்போது மீண்டும் அந்த அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் சதம் அடித்து ஜெய்ஸ்வால் தன்னை நிரூபித்துள்ளார். வெளிநாடுகளில் ஜெய்ஸ்வால் அடித்த 3வது சதம் இதுவாகும்.
2023-ல் ரோஸோவில் 171 ரன்கள், 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் 161 ரன்கள், லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக 101 ரன்கள் என 3 சதங்களை ஜெய்ஸ்வால் வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளார்.
இதுவரை எந்த பேட்டரும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அறிமுக ஆட்டத்தில் 3 சதங்களை அடித்தது இல்லை.
96 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், அடுத்த 48 பந்துகளில் விரைவாக 50 ரன்கள் சேர்த்து 144 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இதில் 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.
23 வயதில், ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் சயத் 1936ம் ஆண்டு ஓல்டு ட்ராபோர்ட் மைதானத்தில் 21 வயதில் 112 ரன்கள் சேர்த்த முஸ்தாக் அலிதான் குறைந்த வயதில் பிரிட்டன் மண்ணில் சதம் அடித்த பேட்டர் ஆவார்.
பட மூலாதாரம், Getty Images
கில்லின் ‘தில்’ பதில்
கடந்த முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத நிலையில் தனக்கு கிடைத்த கேப்டன் வாய்ப்பிலும், ஆட்டத்திலும் கில் சாதித்து பதில் அளித்துவிட்டார்.
சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டபின், கேப்டன் பொறுப்பு சுமையுடன் அவரின் பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற கேள்விக்கும், எதிர்பார்ப்புக்கும் சரியான பதில் அளித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பு ஏற்றவுடன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெயரை சுப்மன் கில் பெற்றார். இதற்கு முன் விஜய் ஹசாரே(1951, இங்கிலாந்து), சுனில் கவாஸ்கர்(1976, நியூசிலாந்து) திலீப் வெங்சர்க்கர்(வெஸ்ட் இண்டீஸ், 1987), விராட் கோலி(2014, இங்கிலாந்து) ஆகியோர் கேப்டன் பொறுப்பேற்றவுடன் முதல் ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தனர்.
சுப்மன் கில் களத்துக்கு வந்ததில் இருந்து டெஸ்ட் போட்டியைப் போன்று நிதானமாக ஆடவில்லை. மாறாக வேகமாக ரன்களைச் சேர்த்து, 56 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 50 ரன்களைச் சேர்க்க 84 பந்துகளை எடுத்துக்கொண்டு 140 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
இங்கிலாந்து பந்துவீச்சு சொதப்பல்
இங்கிலாந்து அணியில் ஆண்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாத குறை நன்றாகவே வெளிப்பட்டது. கார்ஸ், டங், வோக்ஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சு எந்த விதத்திலும் இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை.
விதிவிலக்காக இருந்தது சுழற்பந்துவீச்சாளர் ஷோயிப் பஷீர் பந்துவீச்சு மட்டும்தான். இங்கிலாந்து மண்ணில் நன்கு பந்தை திருப்பும் பஷீர், இந்திய பேட்டர்களை சற்று யோசித்து ஆடவைத்தது.
வேகப்பந்து வீச்சில் கார்ஸ் பந்துவீச்சு மட்டுமே பரவாயில்லை ரகம். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பெரும்பாலும் “லைன் அன்ட் லென்த்தில்” சரிவர பந்து வீசாததே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய ஸ்கோர் சேர்க்க காரணமாக இருந்தது.
முதல் நாள் ஆட்டத்தின் பின், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் பந்துவீச்சில் எத்தனை பந்துகளை “ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப்” வீசியிருக்கிறோம் என ஆய்வு செய்தால் அவர்களின் தவறு தெரிந்துவிடும்.
காயத்திலிருந்து மீண்டுவந்த கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, 145 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் சரியான லைன் அன்ட் லென்த் இல்லை என்பதால் அவரது பந்துவீச்சு பேட்டர்களுக்கு பெரிதாக சிரமத்தை தரவில்லை.
ஹெடிங்லி ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதைப் புரிந்து கொண்டு இங்கிலாந்து அணி அதற்கேற்ப பந்து வீசவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்விங், காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை திருப்பும் பாணி, துல்லியமான யார்கர்கள் என எதுவுமே இல்லை.
முதல் நாளில் செய்த தவறுகளை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆய்வு செய்து திருத்தி விட்டு 2வது நாளான இன்று ஆட்டத்தை எதிர்கொண்டால் மட்டுமே அந்த அணியால் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் பிரமாண்ட ஸ்கோராக மாறிவிடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு