India
oi-Shyamsundar I
அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் விமானத்தின் 12வது பயணி ஆவார். விபத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று டேக் ஆப் செய்த சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று மதியம் நடந்தது.
போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானமான இதில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். விபத்து குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், அப்பகுதியில் இருந்து வெளியான காட்சிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
விபத்துக்கு உள்ளன விமானம் ஏர் இந்தியா 171 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு மதியம் 1:10 மணிக்கு செல்லக்கூடிய விமானமாகும்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள்
அகமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் விமானத்தின் 12வது பயணி ஆவார்.
விபத்து நடந்த இடத்திற்கு ஏழு தீயணைப்பு வண்டிகள் உட்பட அவசர சேவைகள் விரைந்துள்ளன. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், விமானத்தில் இருந்தவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இது பற்றி விசாரிக்க விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அகமதாபாத் செல்கிறார். அவர் விஜயவாடாவிலிருந்து குஜராத் அவசரமாக செல்கிறார்.
விபத்து நடந்த உடன் அகமதாபாத் விமான விபத்து சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் முதல்வர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசினார்.
விபத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 25 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர், அவர்கள் பயணிகளா அல்லது விபத்து நடந்த இடத்தில் தரையில் இருந்தவர்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகரன் அறிக்கை
ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI 171 இன்று ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியதாகத் தெரிவித்தார். இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளைச் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். சம்பவ இடத்தில் இருக்கும் அவசர உதவி குழுவினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ஆதரவையும், கவனிப்பையும் வழங்க ஏர் இந்தியா நிறுவனம் தன்னாலான அனைத்தையும் செய்து வருவதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும், இது குறித்து சரியான தகவல்கள் கிடைத்தவுடன் அடுத்த கட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும், தகவல்களைப் பெற விரும்பும் குடும்பங்களுக்காக அவசர உதவி மையம் மற்றும் ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.