Madurai
oi-Pavithra Mani
மதுரை: மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு கிராமிய கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டுக்கு திருப்பரங்குன்றம் மலையைப் போன்று பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார்.
இந்து முன்னணி சாா்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. பறை இசை, மேளதாளம் முழங்க கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடானது இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.
இந்த மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் ஆதீன குரு மகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியோர், பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், இந்து முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனர். வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் முருக பக்தர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
திராளான பக்தர்கள் அமர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் வகையில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 பகுதிகள் பிரிக்கப்பட்டு அதில் ஒவ்வொரு பகுதியிலும் 2 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கம் இடையேயும் 12 அடியிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக தற்காலிக குடிநீர் தொட்டி, 13 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டையொட்டி, திருப்பரங்குன்றம் மலை, நிற்கும் நிலையில் சுவாமி முருகன் போன்று பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் வலது பக்கத்தில் ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியவா்கள் அமருவதற்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு முன்னர் கலை நிகழ்ச்சிகளுக்கான மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில், ஏராளமானோர் ஒன்றாக சேர்ந்து கந்தசஷ்டி கவசம் படிக்கும் சாதனை நிகழ்ச்சியும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பக்தர்கள், பொதுமக்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் காவல் துறை சாா்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.