Press "Enter" to skip to content

“மக்கள் மனதில் வாழும் தலைவர்” கருணாநிதி எனும் சகாப்தம்! முத்தமிழ் அறிஞருக்கு இன்று பிறந்த நாள் | Kalaignar Karunanidhi’s 102nd Birth Anniversary: Special Insights on the Scholar of Great leader

Chennai

oi-Mani Singh S

சென்னை: மக்கள் மனதில் வாழும் தலைவர், தமிழுக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்ட முத்தமிழறிஞர் கருணாநிதிக்கு இன்று 102வது பிறந்தநாள். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் காலை முதலே அவரது சாதனைகளை குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஓய்வறியா சூரியன்.. தனது கடைசி காலம் வரை தமிழுக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.. முத்தமிழ் வித்தகர், முத்தமிழறிஞர் என கலைஞர் கருணாநிதியை பற்றி சொல்வதற்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளன. நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி என அழைக்கப்படும் கருணாநிதி, கலைஞர் என்று அழைக்கப்படுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர்.

kalaignar-karunanidhi-s-102nd-birth-anniversary-special-insights-on-the-scholar-of-great-leader

தனித்திறமை படைத்த கருணாநிதி

கலைஞர் கருணாநிதி தடம் பதிக்காத கலை வடிவங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், வரலாறு என எல்லா வடிவங்களிலும் முத்திரை பதித்து அனைத்திலும் தனது தனித்திறமையை ஏற்படுத்தியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தார். கலைஞர் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தனது 15 வயதிலேயே கையெழுத்து பிரதியை தொடங்கியவர் கருணாநிதி. பிற்காலத்தில் அரசியல் தலைவராக உருவெடுத்த அண்ணாவை முதன் முதலாக 1940களின் துவக்கத்தில் சந்தித்தார்.

தோல்வி அடைந்ததே கிடையாது

1949 ஆம் ஆண்டு புதிதாக ஒரு கட்சியை சி.என். அண்ணாதுரை துவங்கியபோது, அவருக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி. 25 வயதிலேயே கட்சியின் பிரசாரக்குழு உறுப்பினராக கருணாநிதி நியமிக்கப்பட்டார். அதே கால கட்டத்தில் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், திரைத்துறையில் முத்திரை பதித்தார். மலைக்கள்ளன், மனோகரா, பராசக்தி படங்களின் மூலம் திரைத்துறையிலும் வசனகர்த்தாவாக உச்சத்திற்கு சென்றார் கருணாநிதி.

1957ல் நடந்த தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, 2016-ஆம் ஆண்டு திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றது வரை போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியே அடைந்தது இல்லை என்ற வரலாறை படைத்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள்

கடந்த 1969 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அண்ணாதுரை மறைந்தவுடன் புதிய முதல்வராக கருணாநிதி பதவியேற்றார். கருணாநிதி ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார், அவர் 1969, 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுமார் 19 ஆண்டுகள் முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அனுதினமும் அயராது பாடுபட்டார். அவர் நிறைவேற்றிய பல திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்ந்தன.

குறிப்பாக அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகும் திட்டம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 25% ல் இருந்து 31 சதவீதமாக உயர்வு; பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் சம உரிமை, ஒரு ரூபாய்க்கு அரிசி, கலைஞர் காப்பீட்டு திட்டம், வீடுதோறும் இலவச வண்ண தொலைக்காட்சி, உழவர் சந்தை, கை ரிக்‌ஷா தடை என தன்னுடைய 19 வருட பதவி காலத்தில் கருணாநிதி செய்த சாதனைகள் ஏராளம். மாநில உரிமைகளுக்காக முதலில் ஒலித்த குரல் கருணாநிதியின் குரலாகவே இருந்தது.

கருணாநிதி பிறந்தநாள் இன்று

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்று கொடுத்தவர் கருணாநிதி தான். எழுத்தாளராக, வசன கர்த்தாவாக, சிறந்த ராஜதந்திரியாக கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை பயணம் முழுவதுமே ஒரு நூலகத்திற்கு ஈடானது. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு கருணாநிதி எழுதி குவித்து இருக்கிறார். தொண்டர்களுக்கு எழுதி வந்த ‘உடன்பிறப்பே’ என்ற கடிதத் தொடர், உலகின் மிக நீளமான தொடர்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது.

2018 ஆம் ஆண்டு தனது 94 வயதில் இயற்கை எய்திய கருணாநிதியின் புகழ் இந்த பார் உள்ளவரை நீடித்து நிற்கும் என சொல்லும் அளவிற்கு அவருடைய சாதனைகள் ஏராளம். இத்தகைய பெருமை மிக்க கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் (ஜூன் 03) இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் காலை முதலே அவரது சாதனைகளை குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Source link

More from NewsMore posts in News »