முதல் கருணை இல்லத்தைச் சென்னையில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில் அருகே, அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ‘காரோட்டி’ மு. கண்ணப்பன் தலைமையில் முதல்வர் மு. கருணாநிதி திறந்துவைத்தார். விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் திருமுருக கிருபானந்த வாரியாரும் பங்கேற்றுப் பேசினர்.
தந்தையின் நினைவில் கருணாநிதி உருக்கம்!
சிறப்புரையாற்றிய முதல்வர் கருணாநிதி மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக, தன்னுடைய தந்தை முத்துவேலரே சின்னஞ்சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து அனாதையாக இருந்து பிறரால் வளர்க்கப்பட்டவர் என்று குறிப்பிட்டதுடன், அந்த அனாதையின் பிள்ளை என்பதும் அனாதைச் சிறார்களைப் பராமரிக்கும் இந்தத் திட்டம் கொண்டுவந்ததற்கு ஒரு காரணம் என்றார்.
கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்ற தெய்வ பக்தி மிகுந்த மதத் தலைவர்களே ஆலயங்கள் மூலம் அனாதை விடுதி நடத்தும் திட்டத்தை வாழ்த்தி ஆசி கூறியுள்ளதால் இதற்கு மற்றவர்கள் அரசியல் காரணமாக எதிர்ப்புத் தெரிவித்தாலும் அந்த மறுப்புக்கு மதிப்பு இராது; மக்கள் பங்குபெற வேண்டிய, ஆண்டவனுக்கு உவப்பான சீரிய நல்ல திட்டம் இது என்றும் குறிப்பிட்டார் கருணாநிதி.
இந்தக் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஆலய வழிபாட்டுக்கு தி.மு.க. எதிரியல்ல என்றும் கூறினார்.
அரை நூற்றாண்டான நிலையில், இந்தத் திட்டம் எத்தனையோ வடிவங்கள் மாறி இப்போது மாவட்டந்தோறும் அரசு குழந்தைகள் காப்பகங்களாகத் தொடருகிறது.
இதே பிறந்த நாளையொட்டிதான், சென்னை – மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் தொழிற்சாலை மற்றும் பயிற்சிக் கூடத்தையும் தமிழ்நாடு பொருள் போக்குவரத்துக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதி தொடக்கிவைத்தார்.
மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாளுடன் இன்று விதவைகள் மறுவாழ்வுத் திட்டமும் கருணை இல்லங்களும்கூட பொன் விழா கொண்டாடுகின்றன!
(ஜூன் 3 – கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்)